இன்று நாக சதுர்த்தி!!(14.08.2018) :


நாக சதுர்த்தி மற்றும் கருடபஞ்சமி ஆகிய  இரண்டும், அடுத்தடுத்து வரும் இரட்டை விரதங்கள் ஆகும்.

ஆடி மாதம் வளர்பிறை சதுர்த்தியில் தொடங்கும் முதல் பண்டிகை இது. தக்ஷிணாயன புண்ணியகாலம் (ஆடி முதல் - மார்கழி) வரை இறை வழிபாட்டிற்கு உகந்த காலம். பெரும்பாலும் கோலாகலக் கொண்டாட்டங்களைத் தவிர்த்துவிட்டு, விரதங்கள், வழிபாடுகள் என மக்கள் தங்கள் மனங்களில் இறையுணர்வை ஏற்படுத்திக் கொள்ளும் மாதங்கள் இந்த ஆறு மாதங்கள்.


நாகசதுர்த்தி விரதம் தங்கள் கணவரின் நலனுக்காகவும் பிள்ளைகளின் நலனுக்காகவும் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் ஆகும். நாகசதுர்த்தி அன்று காலை விரதம் இருந்து, பாம்புப் புற்றுக்கு பால் ஊற்றி, துள்ளுமாவு படைத்து கணவர் மற்றும் பிள்ளைகளின் நலனுக்காக வேண்டிக் கொண்டு பிரார்த்தனை செய்வார்கள்.

அடுத்த நாள் வருவது கருட பஞ்சமி. இந்த விரதத்தின் பின்னணியில் அன்பு மயமான ஒரு வரலாறும் உண்டு.

ஒரு வீட்டில் 7 சகோதரர்களுக்கு ஒரே ஒரு தங்கை. பெற்றோர் காலமாகிவிட்டதால், சகோதரர்கள்  அந்தத் தங்கையை கண் போல பார்த்துக்கொண்டார்கள்.

வயலில் வேலை செய்யும் சகோதரர்களுக்கு அவள் தினமும் மதியம் கஞ்சி எடுத்துச் செல்வாள். அன்று கருட பஞ்சமி அது தெரியாமல் அவள் அன்றும் கஞ்சி எடுத்துக்கொண்டு போகும்போது மேலே கருடன் ஒன்று ஒரு பாம்பைக் கவ்விக்கொண்டு போனது. கருடன் வாயில் சிக்கித் தவித்த பாம்பு விஷத்தைக் கக்க அது கஞ்சியில் விழுந்தது.

அதை அறியாமல், அவள் விஷம் விழுந்த கஞ்சியைத் தன் சகோதரர்களுக்குக்  கொடுக்க அவர்கள் அனைவரும் மாண்டுவிட்டனர். அதைக் கண்ட அவள் தானும் அதைக் குடித்து உயிர் விட நினைத்தாள். அப்போது  வயது முதிர்ந்த ஒரு தம்பதியர் அவளைத் தடுத்து கருட பஞ்சமி விரதம் கடைப்பிடிக்கச் செய்து, விரதத்தின் நிறைவில் அட்சதை, புற்றுமண் ஆகியவற்றை உடன்பிறந்தவர்களின் வலது காதில்  வைக்கச் சொல்ல அவளும் அப்படியே செய்தாள். சகோதரர்களும் உயிர் பெற்று எழுந்தனர்.

நாகசதுர்த்தியன்று நோன்பிருந்து , புற்றுக்கு பால் வார்த்து பின் வீட்டில் 7 முடி போட்ட நோன்புக் கயிறு அணிந்து பூஜை செய்து கணவருக்காக வேண்டிக்கொள்வர்.

மறுநாளும் புற்றுக்குச் சென்று பால்வார்த்த பின் புற்று மண் எடுத்து வந்து சகோதரரின் வலது காதில் வைப்பார்கள். இதனால் சகோதர ஒற்றுமை உண்டாகும்.

கணவரின் நலனுக்காகவும், பிள்ளைகளின் நலனுக்காகவும்  நாகசதுர்த்தி அன்றும், சகோதரர்களின் ஒற்றுமைக்காகவும் அவர்களின் தீர்க்காயுளுக்காகவும் கருடபஞ்சமி அன்றும்  விரதம் இருந்து பிரார்த்திப்போம். இன்று காலையில் நோன்பு இருக்க மறந்தவர்கள் மாலையிலாவது அருகில் இருக்கும் கோயிலுக்குச் சென்று அங்கு புற்று இருந்தால் அந்தப் புற்றில் பால் வார்த்து பிரார்த்தித்துக் கொள்ளலாம். புற்று இல்லாத கோயில்களில் அங்கே பிரதிஷ்டை செய்திருக்கும் நாகர் சிலைகளை வழிபட்டு அருள்பெறலாம்.


Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

பரிஹாரங்க பைரவர் பூஜை