காலக்கணக்கர் காலபைரவர் :
நவகிரகங்கள் காலச்சக்கரத்தின் ஆளுகைக் குட்பட்டு செயல்படுகின்றன. இக்காலச் சக்கரத்தை இயக்குபவரே காலபைரவர். அவரது ஆணைக்கு உட்பட்டே ஒவ்வொரு நொடியும் உருவாகி மறைகிறது.
காலபைரவர் சிவனின் ஒரு அம்சம். வாஸ்து புருஷனுக்கு இவரே கடவுள். பரமேஸ்வரனுக்கு 64 திருமேனிகள் உள்ளதுபோலவே பைரவருக்கும் 64 உருவங்கள் உண்டு. அவற்றில் முக்கியமானவர்கள் எட்டு பைரவர்கள். இவர்களை அஷ்ட பைரவர்கள் என்பர்.
ஒவ்வொரு பைரவரிடமிருந்தும் எட்டு பைரவர்கள் தோன்றினர். இவர்களே அஷ்டாங்க பைரவர்கள் என்கின்ற 64 பேர்.
அஷ்ட பைரவர்- தேவி- வாகனம்
1. அசிதாங்க பைரவர்- பிரம்மி- அன்னம்.
2. ருரு பைரவர்- மகேஸ்வரி- ரிஷபம்.
3. சண்ட பைரவர்- கௌமாரி- மயில்.
4. குரோத பைரவர்- வைஷ்ணவி- கருடன்.
5. உன்மத்த பைரவர்- வாராஹி- குதிரை.
6. காலபைரவர்- இந்திராணி- யானை.
7. பீஷண பைரவர்- சாமுண்டி- சிம்மம்.
8. சம்ஹார பைரவர்- சண்டிகா- நாய்.
சுவானம் என்று சொல்லப்படும் நன்றிமிக்க நாய்தான் பைரவரின் வாகனம். இது காவலுக்கு ஏற்றது. எமதூதர்களைப் பார்க்கும் சக்தி இந்த நாய்க்கு உண்டு. சிவன் கோவில்களில் பைரவருக்கு அனுதினமும் காலை- மாலை பூஜையும், நைவேத்தியமும் உண்டு. இரவு அவரிடமே கோவில் சாவியை ஒப்படைப்பார்கள். மறுநாள் காலை இவரிடம் உத்தரவு பெற்றபிறகே ஆலயத்தைத் திறப்பார்கள்.
பைரவர் தோன்றியது கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி நாள். ஆகவே அன்று பைரவரை வழிபடுவது சிறந்தது. எட்டு தலங்களில் துன்பம் தந்த எட்டு அரக்கர்களை சிவபெருமான் வதம்செய்தார். அப்போது அவர் கொண்ட எட்டு உருவங்களே பிரதான அஷ்ட பைரவர் ஆவர். இந்த தலங்களை அட்டவீரட்டான தலங்கள் என்பர். தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு உகந்த நாள். அன்று இவருக்கு சிவப்பு நிற வஸ்திரம் அணிவித்து, சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்து, செந்நிறப் பழங்களை வைத்து தேன், வெல்லம், பேரீச்சை, பாயசம், முந்திரி, உளுந்து வடை முதலியவற்றை நிவேதனம் செய்து பிரார்த்தனை செய்துகொண்டால் நாம் நினைத்தது நிறைவேறும்.
வன்முறைகள், ஆபத்துகள், விபத்துகள், துர்மரணம், அகாலமரணம் மற்றும் பெரும் துன்பங்களிலிருந்து விடுபட நாம் பைரவரை வழிபடவேண்டும்.
காசி க்ஷேத்திரத்தில் பிரதானமாக விளங்கு பவர் காலபைரவர். காசியில் காலபைரவருக்கு வழிபாடு செய்த பின்புதான் விஸ்வநாதருக்கு வழிபாடுகள் செய்வார்கள். காலபைரவரை சேவித்தால்தான் காசி யாத்திரை சென்று வந்த புண்ணியம் கிட்டும்; யாத்திரை நிறைவடையும். காசியில் எட்டு திசைகளிலும் எட்டு பைரவர்கள் உள்ளனர். அதனால் இத்தலத்தை பைரவ க்ஷேத்திரம் என்பர்.
கங்கையிலுள்ள 64 ஸ்நான கட்டங்களில் 64 பைரவர்கள் இருப்பதாகக் கூறுகின்றனர்.
காசிக்கு வந்து பாவம் நீங்கியவர்களின் கணக்கை சித்திர குப்தனுக்கு பதிலாக பைரவரே செய்வதாகக் கூறுவர். காசி யாத்திரையை முடிக்கும்போது பண்டாக்கள் கறுப்பு பட்டுக் கயிறை மிருத்யுஞ்ஜய மந்திரம் ஜெபித்து நம் கையில் கட்டுவார்கள். இதுதான் காசிக்கயிறு.
சொர்ணாகர்ஷண பைரவர் :
செல்வம் தருபவர். சுவர்ணா என்ற சுவர்ண பைரவியை மடியில் அமர்த்திக்கொண்டு காட்சி தருவார். மஞ்சள் ஆடை, பொன்னாலான அட்சய பாத்திரம் ஏந்தியபடி இருப்பார். இவர் படத்தை வீட்டில் வைத்து முறைப்படி பூஜித்தால் வறுமை விலகும்; லட்சுமிகடாட்சம் பெருகும். தேய்பிறை அஷ்டமியன்று ஆலயத்தில் அமர்ந்து பைரவ ஸ்தோத்திரம் கூறி திருவிளக்கேற்றி அர்ச்சிப்பது மிகவும் விசேஷம்.
அஷ்டமி பிரதட்சிணம் :
கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபடுவதுபோல, மார்கழி மாத வளர்பிறை அஷ்டமியில் சிவாலயப் பிரதட்சிணம் செய்வது வழக்கத்தில் உள்ளது. எந்த சிவன் கோவிலாக இருந்தாலும் இந்த நாளில் பிரதட்சிணம் செய்தால் கோடி பாவங்களும் விலகி முக்தி கிட்டுமென்று கந்தபுராணம் கூறுகிறது. அஷ்டமியில் அரனைத் தொழுது நற்கதி அடைவோம்.
Comments
Post a Comment