குண்டடத்தில் காசி கால பைரவர் ....
பாண்டவர்கள் அஞ்ஞாத வாசம் செய்தபோது கீசகனை பீமன் கொன்ற இடம் என்பதே குண்டடமாக மருவியது.கோயிலின் முன்பு திருக்குளம். கோபுரத்தின் முன் விளக்கு தூண். அழகிய ராஜகோபுரம் வழியாக கோயிலினுள் செல்லலாம். முதலில் தெற்கு நோக்கி கால பைரவர், தனி சந்நதியில் தரிசனம் தருகிறார். அடுத்து கிழக்கு நோக்கி அமைந்துள்ளார், விடங்கீஸ்வரர்.
விடங்கீஸ்வரருக்கு அருகிலேயே பாலசுப்ரமணியர் சந்நதி உள்ளது. இங்குள்ள மயிலின் தலை வழக்கத்திற்கு மாறாக இடப்பக்கம் நோக்கித் திரும்பியுள்ளது. சூரசம்ஹாரத்திற்கு முன் இந்திரன் மயிலாக இருந்து போருக்குச் சென்ற இடமாம் இது. அடுத்து அன்னை விசாலாட்சி தனி சந்நதியில் அருளாட்சி புரிகிறாள்.
கால பைரவர், விடங்கீஸ்வரர், கல்யாண சுப்ரமணியர், விசாலாட்சி ஆகிய நான்கு சந்நதிகளும் தனித்தனி கோபுர விமானங்களோடு அழகாக காட்சி தருகின்றன. மகா கணபதி, பாலமுருகன், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை, சந்திரன், சூரியன், நர்த்தன விநாயகர், சண்டிகேஸ்வரர், நவகிரகங்கள் சந்நதிகளும் தனித்தனியாக உள்ளன. கருடாழ்வாருடன் கூடிய வரதராஜப் பெருமாள், ராமானுஜர், ஆஞ்சநேயர் ஆகியோரும் இந்தக் கோயிலில் அருள் வழங்குகிறார்கள். கோயிலின் தென்புறம் உள்ள அரச மரத்தடியில் சுயம்பு லிங்கமாக பாம்பாடீஸ்வரர் அருள்புரிகிறார்.
இது, கால பைரவர் ஆலயமாக, அஷ்ட பைரவர் தலங்களில் ஒன்றாக விளங்குகின்றது.


ஒரு காலத்தில் வனமாகத் திகழ்ந்த இந்த இடத்தில் ‘விடங்கர்’ என்ற முனிவர் தவமிருந்தார். இவரது இஷ்ட தெய்வமான காசி விசுவநாதர் இவரது தவத்திற்கு இடையூறு ஏற்படாதவாறு கால பைரவ மூர்த்திகளில் ஒருவரான வடுக பைரவரை இங்கு பாதுகாப்புக்கு அனுப்பி வைத்தார்.
வடுக பைரவர் சேர நாட்டு வியாபாரிகளிடம் மிளகைப் பாசிப்பயிராக மாற்றி அவர்கள் பாண்டிய நாட்டு மன்னன் முன்பு திண்டாடும் திருவிளையாடலை நிகழ்த்தினார். பாண்டிய மன்னர்களின் நோயைக் குணப்படுத்தினார். பாண்டிய மன்னன் இத்தலத்தில் இலந்தை மரத்து புற்றடியில் குடிகொண்டிருந்த பைரவரை வெளியே கொண்டு வந்து கோயில் கட்டினான்.
7 பிராகா ரங்கள், 8 தெப்பக் குளங்களுடன் பிரமாண்டமாக பாண்டிய மன்ன னால் அமைக் கப்பட்ட கோயில் படையெடுப்புகளால் பாதிக்கப்பட்டது. லண்டன், பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் பைரவர் சிலையின் புகைப்படத்தை இந்தக் கோயிலில் காணலாம். அந்த பைரவர், குண்டடத்து வடுகநாதர்தான் என பக்தர்கள் கருதுகின்றனர். இதற்கு ஆதாரமாக, கரிகால் சோழனின் கல்வெட்டு ஒன்றும் இங்கு காணப்படுகிறது.
இந்த ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமி பூஜை விசேஷமானது. அன்று பைரவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை அஷ்டமி, பைரவர் அவதரித்த தினம் என்பதால் அன்று கங்காபிஷேகத்துடன் கூடிய விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. அமாவாசை மற்றும் செவ்வாய்க் கிழமைகளிலும் இங்கு பூஜைகள் அமோகமாக நடைபெறுகின்றன.
காசிக்கு சென்று கால பைரவரை வணங்க முடியாதவர்கள் குண்டடத்து கால பைரவ வடுகநாதரை வணங்கி அருள் பெறலாம் என்கிறார்கள்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்திலிருந்து 16 கி.மீ. தொலைவில் குண்டடம் அமைந்துள்ளது. குண்டடம் பேருந்து நிலையத்திலிருந்து உப்பாறு டேம் சாலையில் சுமார் 100 மீட்டர் தொலைவில் இக்கோயில் உள்ளது.
விஜய் சுவாமிஜி,
செல் :+91 9443351497 , 9842499006.

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :