#துர்கை
💥💥நல்லன
எல்லாம் தருவாள் துர்கை💥💥
பட்டீச்சுவரத்து துர்கை
கும்பகோணத்துக்குத் தெற்கில் 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது
பட்டீச்சுவரம். இங்கு ஞானாம்பிகை உடனாய பட்டீச்சுவரர் ஆலயம் உள்ளது. இந்த
ஆலயத்தின் வடக்குப் பிராகாரத்தில் வடக்கு நோக்கிய பெரிய சந்நிதியில்
எழுந்தருளியிருக்கிறாள் ஸ்ரீதுர்கை. வலது முன்கரம் அபய கரமாகத் திகழ, இடது கரம் தொடை மீது
வைக்கப்பட்டு அதில் கிளி ஒன்று அமர்ந்துள்ளது.
வலது பின் கரங்கள் சக்கரம், அம்பு, கத்தி ஆகியவற்றைத்
தாங்கியுள்ளன. இடது பின் கரங்களில் சங்கு, வில், கேடயம் ஆகியவை
காணப்படுகின்றன. ஒய்யாரமாக விளங்கும் அவளுக்குப் பின்புறம் சிங்கம் கம்பீரமாக
நிற்கிறது. கல்லிலேயே பிரபா மண்டலமும் உள்ளது. பெரிய எருமைத் தலையினை
பீடமாகக்கொண்டு அதன்மீது நிற்கிறாள், தேவி. சிறந்த பிரார்த்தனை
தலமாக விளங்கும் இந்தச் சந்நிதியில்... விரைவில் திருமணம் நடக்கவும், பகைகள் விலகவும், வழக்குகளில் வெற்றி பெறவும், குழந்தை பாக்கியத்துக்காகவும்
நேர்ந்துகொள்கின்றனர்.
சிதம்பரச் செல்வி
சிதம்பரத்தில், சபாநாயகர் ஆலயத்தில் சிவகங்கை
தீர்த்தம் அமைந்துள்ளது.அதன் கரையில் (சிவகாமி சந்நிதி கோபுரத்தையொட்டி) துர்கை
ஆலயம் தனியே அமைந்துள்ளது. இந்த துர்கையின்மீது பலர் தோத்திரப் பாடல்களைப்
பாடியுள்ளனர். சக்திமிக்க இந்தச் சிதம்பரச் செல்வி, நல்லன அனைத்தையும் தருபவள்!
காஞ்சிபுரத்தில் பல துர்கை
ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றில் தலைமைத் தானமாக அமைந்தது, கச்சபேசத்துள் அமைந்துள்ள
துர்கா தேவி கோயிலாகும்.
கச்சபேசுவரர் ஆலயக்
கொடிமரத்தின் முன்னே அமைந்துள்ள அகன்ற முற்றம் ‘பஞ்சந்தி’ என்று அழைக்கப்படுகிறது.
இங்கு துர்கை ஆலயம் மாடக் கோயிலாகத் திகழ்கிறது. தெற்கு நோக்கிய கருவறையில் பெரிய
அழகிய திருவுருவுடன் துர்கை விளங்குகிறாள். திருமணத் தடை, கடன் தொல்லை, புத்திரப் பேரின்மை ஆகிய பிரச்னைகள்
நீங்க சிறப்பு பூஜைகளும் பிரார்த்தனைகளும் இங்கே செய்யப்படுகின்றன. இங்கே, துர்கை இஷ்டஸித்தி
தீர்த்தத்தில் நீராடி,
சிவனாரை வழிபட்டு பேறு
பெற்றாள் என்று கூறப்படுகிறது.
வேதாரண்யம் துர்கை
கடற்கரைத் தலமான
வேதாரண்யத்தில்,
ஸ்ரீவேதாரண்யேசுவர சுவாமி
ஆலயத்தின் உட்பிராகாரத்தில், வடகிழக்கு
முனையில் தெற்கு நோக்கியவாறு பெரிய சந்நிதியில் துர்கை எழுந்தருளியுள்ளாள்.
‘சுந்தரி பீடம்’ என்று போற்றப்படுகிறது இந்த
அம்மையின் சந்நிதி. இங்கு காப்புக்கயிறு அளிக்கின்றனர். ராகு கால வேளைகளிலும்
வெள்ளிக்கிழமைகளிலும் திரளான மக்கள் வந்து வழிபாடு செய்கிறார்கள். மஞ்சள், குங்குமம் ஆகியவற்றை மங்கலப்
பிரசாதமாக அளிக்கின்றனர். இங்கு வந்து வழிபட்டால் பில்லி - சூனியம், தெய்வக் குற்றங்கள், கிரகக் கோளாறுகள் ஆகியவை
விலகுகின்றன என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Comments
Post a Comment