சக்தி வழிபாட்டின் ஒரு அங்கமாக ஆடி மாதம், சுக்கில பட்சம் வெள்ளிக்கிழமை ஒவ்வொரு இல்லத்திலும் கொண்டாடப்படும் முக்கிய விரதம் வரலட்சுமி விரதம். இந்த தினத்தில்தான் மகாலட்சுமி பாற்கடலில் அவதரித்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. ரிக்வேதம் ‘ஆக்கத்திற்கும், அருளுக்கும் தெய்வம் லட்சுமி’ என்றும், யஜுர் வேதம், ‘சூரிய மண்டலத்தின் நடுவில் இருப்பவள் லட்சுமி’என்றும், அதர்வண வேதம் ‘மகாலட்சுமி நன்மை செய்பவள்’ என்றும் வர்ணிக்கின்றன. அழகு, கருணை, இயற்கை, நாணம், அன்பு, செழிப்பு, இசை, பஞ்சபூதங்கள் மற்றும் அவற்றின் சேர்க்கைகள், மனம், புத்தி, பிராணன் ஆகியவை அனைத்தும் மகாலட்சுமியின் அறிகுறிகளாக விளங்குகின்றன. மகத நாட்டை சேர்ந்த குண்டினபுரம் என்ற ஊரில் தெய்வ பக்தியும், நற்பண்புகளும் வாய்ந்த சாருமதி என்ற பெண் வாழ்ந்து வந்தாள். அவள் தன் கணவன், மாமனார்-மாமியாரை வெறும் உறவினர்கள் என்று கருதாமல், இறைரூபமாகவே உளமாற நினைத்து அவர்களுக்குப் பணிவிடை செய்து வந்தாள். அவளது உயர்ந்த ஆன்மிக மனப்பான்மை, கூட்டுக்குடும்ப நேர்த்தி, லட்சுமி தேவிக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. ஆதலால் லட்சுமி தேவி ஒருநாள் சாருமதியின் கனவில் தோன்றி ...