மங்கலங்கள் அருள்வார் மங்கள சனீஸ்வரர்
திருநரையூரில், சனிபகவான் தனது இரு மனைவியருடன், திருமணக் கோலத்தில், தசரத சக்ரவர்த்திக்கு காட்சி தரும் கோலமாய் கோயில் கொண்டுள்ளார். இந்தக் கோயிலின் கொடிமரம் இரும்பினால்
ஆனது. இரும்பு சனிபகவானின் உலோகம் என்பது குறிப்பிடத்தக்கது. சனிக்கிழமைகளிலும் சனிபெயர்ச்சி காலங்களிலும் இங்கு வந்து பூஜிப்பவர்களுக்கு சர்வ ஐஸ்வர்யமும் தருவேன் என அயோத்தி
மன்னர் தசரத சக்கரவத்தியிடம், சனீஸ்வரன் பிரமாணம் செய்திருக்கின்றார். மேலும் இங்கு, குளிகன், மாந்தி என்ற தனது இரு மகன்களுக்கும் அருள் பரிபாலிக்கும் இந்த சனிபகவான், ஆனந்த
மூர்த்தியாய் பரிணமிக்கின்றார்.
இங்கு மூலவர் சிவபெருமான். ராமேஸ்வரம் கோயிலில் குடிகொண்டிருக்கும் ராம நாதசுவாமிக்கு இணை இந்த சிவபெருமான். அம்பாளுக்கு, பர்வதவர்த்தனி என்று பெயர். ராமேஸ்வரத்திற்கு செய்த
பிரார்த்தனையை இங்கு செலுத்திடலாம். சனி பகவான் மங்கள கரமாய் - மகிழ்ச்சியாய் குடிகொண்டிருக்கும் கோயில் இது. எனவே, இவருக்கு மங்கள சனீஸ்வரர் என்ற பெயரும் உண்டு.
ஒருமுறை சனிபகவான் கிருத்திகை நட்சத்திரத்தில் சஞ்சரித்து பின் ரோகிணி நட்சத்திரத்தை பீடிக்கும் காலம் வந்தது. வசிஷ்டர், விஸ்வாமித்திரர் போன்ற ரிஷிகளுடன், தசரத மன்னரின் அரண் மனைக்கு
வருகை தந்த ரிஷிகள் கூட்டம், ‘‘மன்னர் மன்னா... பன்னிரண்டு ஆண்டுகள் கடும் பஞ்சம், வறட்சி, குடிகளுக்கும் பசுக்கள் போன்ற கால்நடைகளுக்கும் பசி, பிணி போன்றனவற்றால் பெரும் அவதி
ஏற்படும். எனவே, தசரதா, சனியின் தாக்கத்தை தடுத்து நிறுத்து. ரோகிணி நட்சத்திரத்தை சனியின் பிடியில் இருந்து காப்பாற்று’’ என்றனர். நாட்டின் நலன் கருதி, அதிவேகமாக செல்லக்கூடிய ரதத்தில்,
தெய்வங்களின் வரத்தால் பெற்ற பாணங்களுடன் சனிபகவானை எதிர்த்துப் போரிட்டார் தசரதர். ஈஸ்வரன் அம்சமான சனிபகவான், ‘‘அப்பா தசரதா, என் வெறும் பார்வையே ஒருவனை சீரழித்துவிடும்.
ஆனாலும் நாட்டு மக்களுக்காக நீ என்னையே எதிர்க்கத் துணிந்ததால், உன் இஷ்டபடியே ரோகிணியை நான் பீடிக்க மாட்டேன். அதோடு, நானே சனிக்கிழமை, ரோகிணி நட்சத்திரத்தில்
அவதரித்தவன்தான்’’ என்று சொன்னார். பூவுலகில், துயரப்படும் மக்களை காக்க பூமிக்கு வரவேண்டும் என்று தசரதன் பிரார்த்திக்க, ‘‘திருநரையூர் சென்று தீர்த்தத்தில் மூழ்கி எழு. உனக்கு காட்சி தந்து
ஆனந்தமாக அங்கே குடிகொள்வோம்’’ என்றார்.
இதனை அகஸ்தியர்,
‘‘ரோகிணி தனை காத்த தசரதன் தன்
பக்திக்கு கட்டுண்ட மந்தன்
மணக்கோலத்து புவியிருந்து பக்தரை
பரிபாலனஞ் செயுந் தலமிது. ஈண்டுறை
தட்சிணத்தோன் இடப ஆர்தி
யோடுறைய யிவனே வியாழனாமே
கேட்டது தருவன் - எண்ணியது
முடிப்பனவன் திண்ணமே’’
-என்றார். பலிபீடம் பின்னால் காகம் அழகுற வீற்றிருக்கும். இவருடைய தேர், தங்கத்தினால் ஆனது. கழுகுதான் இத்தேரை இழுத்துச் செல்லும்.
சனிபகவான் சந்திரனை கடக்கும் காலத்தினை முன்னும் பின்னும், எட்டாம் இடத்தை மற்றும் நான்காம் இடத்தை தொடுகையிலும் இங்கு எழுந்தருளியுள்ள மங்கள சனீஸ்வரனை, புதுத் துணியில்
எள்ளை வைத்து சிறு மூட்டையாகக் கட்டி, நல்லெண்ணெயில் தோய்த்து தீபமேற்றி வழிபடுவோர்க்கு நோய் அண்டாது.
‘‘பெரும் பிணி யண்டாது
மேனி வாட்டமகலுமே
மந்தனுக்குற்ற
தான்யமுந் நன்னெயும்
கலந்த தீபமேற்றுவோர் தாம்
மந்த நாளாயின் வினை போமே’’
ஏன் சனிபகவானுக்கு மட்டும் இத்தனை பலம், ஏன் இத்தனை முக்கியம் என்று பலருக்கும் சந்தேகம் வரும். சனிபகவான் ஒருவன்தான் அனுதினமும், மகாமேரு மலையை சுற்றி தொழுது வருபவர்.
வேறு எந்த கிரகமும் இந்த அளவு சிரத்தை எடுத்து இறைவனை வழிபட்டதில்லை. எனவேதான் சனிபகவானுக்கு இந்த சக்தி. மகாமேரு மலையை சுற்ற ஈஸ்வரன் ஒருவனே தக்கான். எனவே சனி,
ஈஸ்வரனின் அம்சம். அழிக்கும் ஆற்றல் உண்டு. எனவே, ஆயுள்காரகன் என்கின்றனர், வேதங்கற்றோர். இந்தக் கோயிலின் தலவிருட்சம், எருக்கு. சனிபகவானின் கரங்கள் நான்கு. அவை முறையே வில்,
அம்பு, திரிசூலம், கதை போன்ற அஸ்திரங்களை ஏந்தி நிற்கும். அழகு மிளிர விளங்கும் இவர், சூரிய குமாரன் ஆவார்.
இங்குள்ள ஆலயத்தில், குருபகவான், தட்சிணாமூர்த்தியாய் இடப வாகனத்தில் வீற்றிருக்கிறார். சிவனே குரு என்கின்ற ‘பிரஹஸ்பதி’ என்பதால், குருபெயர்ச்சி காலத்தில், இங்கு இந்த தட்சிணாமூர்த்தியை
ஆராதித்தால், எப்படிப்பட்ட வியாழ தோஷமும் விலகும். திருமணத் தடை அகலும். சத் சந்தான யோகம், வீடு, இடம் போன்ற அசையா சொத்துக்கள் சேர ஏதுவாகும். ஆழ்ந்த பக்தி, அசைக்க முடியாத
நம்பிக்கை கொண்டு வழிபாடு செய்தால், அடைய முடியாதது என்பது ஏதுமில்லை இம்மண்ணுலகில் என அனுபவித்து உணரலாம். இந்தக் கோயிலின் உள்ளே சென்று தொழுது வந்தாலே புண்ணியம்
சேரும் என்பது ஐதீகம். விபீஷணருக்கு முடிசூட்டியபின், இலங்கையை விட்டு ராமர் நேராக ராமேஸ்வரம் வந்து, பூஜை செய்தார். பின் அயோத்தி செல்லும் வழியில் பற்பல கோயில்களுக்கும் சென்று
பூஜைகள் செய்தார். அப்படி அவர் சென்ற கோயில்களில் அவர் விரும்பித் தொழுத மூர்த்தி, இங்குள்ள ராமநாத சுவாமி ஆகும் என்கிறார் சித்தர்: ‘‘சீதை மணாளன் தொழுதலிங்கமிது தன்னை
தொழார்நரகிற் கிடப்பரே’’ இந்த பெருங்கோயிலின் தொன்மையையும் பெருமையையும் ‘மங்கள மந்தனாரை தொழ மங்களஞ் சேருமிது சத்யமே’ என்னும் சித்தர் மொழியால் உணரலாம்.
Comments
Post a Comment