💥💥இன்று ஓர் ஆலயம்💥💥
🔥🔥அருள்மிகு சிவசூரியப் பெருமான் திருக்கோவில்🔥🔥
சுவாமி : அருள்மிகு சிவசூரியப் பெருமான் சுவாமி.
அம்பாள் : அருள்மிகு உஷாதேவி, சாயாதேவி.
மூர்த்தி : சிவசூரியனும் மற்ற கிரகங்களும் உள்ளது.
தீர்த்தம் : சூரிய தீர்த்தம்.
தலவிருட்சம் : வெள்ளெருக்கு.
தலச்சிறப்பு : நவக்கிரக தோஷ நிவர்த்திக்கான பழமை வாய்ந்த தலம்.  தமிழகத்தில் இங்கு  மட்டுமே சூரியனை மையமாக வைத்துப் பிற கிரகங்கள் தனித் தனிச் சன்னதியில் எழுந்தருளி  உள்ளன.  இங்கு வந்து முறையாக வழிபட்டால் அனைத்து கிரக தோஷங்களும் விலகி நலம்  உண்டாகும்.
வழிபடும் முறை : ஆலயத்தை அடைந்தவுடன் முதலில் ராஜ கோபுரத்துக்கு வெளியே உள்ள சூரிய புஷ்கரணியில் நீராட வேண்டும் அல்லது அந்தத் தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொள்ள  வேண்டும். பின்னர் கோபுர தரிசனம் செய்துவிட்டு, கோள் தீர்த்த விநாயகரைத் தரிசிக்க வேண்டும்.   அதன் பின்னர் நவக்கிரக உற்சவ மூர்த்திகளைத் தரிசனம் செய்ய வேண்டும்.  அடுத்து ஸ்தபன  மண்டபத்தை அடைந்து ஸ்ரீகாசி விசுவநாதர், ஸ்ரீவிசாலாட்சி அம்மையை வழிபட வேண்டும்.  பின்  பிரதான ஸ்ரீ சூரிய பகவானைத் தரிசிக்க வேண்டும்.  சூரிய பகவானிடம் பிரார்த்தனை செய்த பிறகு,  திரும்பி நின்று குரு பகவானை வழிபட வேண்டும்.  அடுத்து கிழக்கு முகமாக சனீஸ்வரர் உள்பட  கிரக நாயகர்களை வழிபட்டால் மிகவும் நல்லது. கொடி மரத்தை வீழ்ந்து வணங்கி, பின்  அங்கிருந்து வடகிழக்கு தெற்குப் பிரகாரம் வழியாக ஒன்பது முறை வலம் வரவேண்டும்.  வலம்  வந்து முடித்த பிறகு, கொடி மரத் தடியில் மீண்டும் வீழ்ந்து வணங்கிவிட்டு, ஒரு புறமாகச் சென்று  உட்கார்ந்து நவக்கிரக நாயகர்களைத் நினைத்து வணங்க வேண்டும்.
தல வரலாறு : இதுவரை கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் மூலம் இக்கோவில் குலோத்துங்க  சோழ மன்னன் காலத்தில் (கி.பி 1060 - கி.பி.1118) கட்டப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.   முதலில் இக்கோவில் அர்காவனம் என்று அழைக்கப்பட்டு பின்னரே சூரியனார் கோவில் என்று மாறியதாக கூறப்படுகிறது.  இமயமலையின் வடக்குப் பகுதியில் பல முனிவர்கள், நான்கு  வேதங்களையும் ஆறு மெய்யறிவு நூல்களையும் பதிணென் புராணங்களையும் அறுபத்தாறு  கலைகளையும் தொண்ணூற்றாறு தத்துவங்களையும் ஆய்வு செய்து கொண்டிருந்தனர்.  அந்த  முனிவர்களுள் ஒருவர் காலவ முனிவர். அவருடைய எதிர் காலத்தைப் பற்றி சிந்தித்த போது  பின்னாளில் அவருக்கு தொழுநோய் பாதிக்கும் என்பதை உணர்ந்து மிகவும் வருந்தினார்.  அவருடனிருந்த முனிவர்கள் அவருடைய கவலையை அறிந்தனர்.  வரும் நோயைத் தடுக்கும் வழிகளை காலவ முனிவருக்கு எடுத்துக் கூறினர்.


காலவ முனிவர் இமயமலைச் சாரலில் ஐம்புலன்களை அடக்கி, நவக்கிரகங்களை நோக்கிக்  கடுந்தவம் புரிந்தார்.  அவருடைய தவத்தினால் ஈர்க்கப்பட்டு ஒன்பது தேவர்களும்  காட்சியளித்தனர்.  அவருக்கு வேண்டும் வரம் அளிப்பதாகச் சொன்னதும் காலவ முனிவர் தம்மை  தொழுநோய் பற்ற இருப்பதாகத் தெரிவித்து, அந்நோய் பற்றாமல் இருக்க வரம் கேட்டார்.  ஒன்பது தேவர்களும் வரமளித்து மறைந்தனர்.
படைப்புக் கடவுளான நான்முகன் ஒன்பது தேவர்களையும் அழைத்து "உயிர்களாய்ப் பிறந்த  அனைவரும் இன்ப துன்பங்களை அனுபவித்தே ஆக வேண்டும்.  அந்த முனிவருக்கு வர இருந்த  நோய் உங்களுக்கு வரும்" என்று சாபம் கொடுத்தார்.  அதற்குப் பரிகாரமாக அவர்களை தென்  தமிழ்நாட்டின் காவிரிக் கரையில் இருக்கும் வெள்ளெருக்கங்காட்டில் கார்த்திகை மாதம், முதல்  ஞாயிறு தொடங்கி பன்னிரு ஞாயிறு வரை பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரையும் எண்ணி  ஒழுக்கத்தோடு தவம் புரியச் சொன்னார்.
அவர்கள் சாபம் நீங்குவதற்காக நான்முகன் வாக்கின்படி வெள்ளெருக்கங்காட்டில் கடுந்தவம்  இருந்தனர். பன்னிரு வாரங்களுக்குப் பின்னர் முப்பெருங்கடவுளரும் காட்சி தந்தனர்.  "உங்களைப்  பிடித்திருந்த தொழுநோய் தொலைந்து விட்டது.  இன்று முதல் இந்த இடம் உங்களுடையதே.   துன்பம் தொலைய உங்களிடம் வருவோர்க்கு நீங்களே அருள் புரிய வரம் தருகிறோம்" என்று வரம் தந்தனர்.
தேவர்கள் ஒன்பது பேரும் துன்பங்களை நீக்கும் பேறு பெற்றதும் அயனும், அரியும் செய்ய  ஏதுமில்லாமல் போய்விடும் என்பதற்காக சிவன் தனது கையில் இருந்த திரிசூலத்தைக் கொண்டு  ஒன்பது புனித நீர் நிலைகளை உருவாக்கினார்.  அந்நீர் நிலைகளில் புனித நீராடி அன்போடு  வழிபடுபவர்களுக்கு மட்டுமே நவக்கிரகங்களின் அருள் கிடைக்கும்.  சூரியன் தலைமையில்  அனைவரும் மேற்கொண்ட தவத்தால் அங்கே அனைவருக்கும் கோவில் உண்டாகும்.  மேலும்,  சூரியனார் கோயில் என்ற பெயரையே இந்த ஊரும் வழங்கி வருமாறு அருள் புரிந்தார்.
வழிபட்டோர் : காலபமுனிவர்.
நடைதிறப்பு : காலை 7.00 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரைமாலை 4.00 மணி முதல் இரவு
8.00 மணி வரை.  ஞாயிறு காலை 5.30 மணி முதல் நண்பகல் 1.30 மணி வரைமாலை 5.30 மணி
முதல் இரவு 8.30 மணி வரை.
பூஜை விவரம் : நான்கு கால பூஜை.
அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.
கோயில் முகவரி : அருள்மிகு சிவசூரியப் பெருமாள் திருக்கோவில்,
சூரியனார்கோயில், திருமங்கலக்குடி அஞ்சல்திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.
தொலைபேசி எண் : 0435 - 2472349.

விஜய் சுவாமிஜி,
செல் :+91 9443351497 , 9842499006.

#அருள்மிகுசிவசூரியப்பெருமான்திருக்கோவில்சூரியனார்கோயில்திருவிடைமருதூர் வட்டம்



Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :