பயம் நீக்கும் பைரவ தரிசனம் :
வாழ்க்கையில் எதைக் கண்டாலும் பயம் என்று கூறுபவர்கள் வணங்க வேண்டிய தெய்வம் கால பைரவர். அச்சம் போக்கி மனதில் தைரியத்தை அளிப்பவர் அவர்.
முற்காலத்தில் சிவன் கோயில்களில் இரவு ஆராதனை முடிந்த பின் சன்னிதிகளைப் பூட்டி சாவியைக் கால பைரவர் காலடியில் வைத்து வீடு செல்வார்கள். மறுநாள் அதிகாலையில் அந்தச் சாவிகளை எடுத்து சன்னிதி திறந்து பூஜைகள் செய்யத் தொடங்குவர். அந்த அளவுக்குத் திருட்டுப் பயம்கூட இன்றி வாழ்ந்தனர்.
அமாவாசை மற்றும் பெளர்ணமி ஆகிய திதிகளுக்கு அடுத்த எட்டாம் நாளான அஷ்டமி திதியன்று கால பைரவரை வணங்க உகந்த நாட்களாகும். அன்றைய தினம் கால பைரவருக்கு அபிஷேகம், அர்ச்சனை ஆகியவற்றைச் செய்யலாம். கால பைரவரை வணங்கினால் உடைமைகள்கூடக் களவு போகாது என்பது ஐதீகம்.
திருவடிசூலம் என்ற இடத்தில் மகா பைரவ ருத்ர ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. ன்னணியில் மலைகள் சூழ அற்புதமான இயற்கை காட்சிகளைக் கொண்டுள்ளது இந்த இடம். கோயிலின் உள்ளே நுழைந்தவுடன் இறைவனின் பாத தரிசனம். பிரதான சந்நிதிக்கு உள்ளே சென்றால் இருபுறமும் திருமலையும், ஸ்ரீமலையும் செயற்கை நீரூற்றுடன் அமைந்துள்ளது.
ஒவ்வொரு ராசியையும் குறிக்கும் பன்னிரண்டு படிகளைக் கடந்து சென்றால் கால பைரவர் நான்கு கைகளுடனும், நாய் வாகனத்துடனும் காட்சி அளிக்கிறார். பிராகாரத்தைச் சுற்றி அஷ்ட பைரவர்களும், அவர்களுக்கே உரிய வாகனத்தில் காட்சி அளிக்கின்றனர்.
கிருஷ்ணர், குபேரர், அழகு பிரத்தியங்கிரா, வைஷ்ணவி தேவி ஆகியவற்றின் சிலைகள் வணங்கி வழிபட ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளன. பஞ்சம் போக்கும் வடிவில் பஞ்சமுக ஆஞ்சனேயர் அருள்பாலிக்கிறார். குகை அமைப்புச் சன்னிதியில் படிகளில் கீழிறங்கிச் சென்றால், ஓம் வடிவில் பிரதட்சணம் செய்து வழிபடலாம் என்பது புதுமை.
Comments
Post a Comment