💥💥இன்று ஓர்
ஆலயம்💥💥
🔥🔥அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோவில்🔥🔥
சுவாமி : அக்கினீசுவரர், தீயாடியப்பர்.
அம்பாள் : சௌந்தரநாயகி, அழகம்மை.
மூர்த்தி : காசி விசுவநாதர் விசாலாட்சி, கஜலட்சுமி, துர்க்கை, தட்சிணாமூர்த்தி.
தீர்த்தம் : சூரிய தீர்த்தம், காவிரி, குடமுருட்டி நதி, அக்னி தீர்த்தம் இன்று கிணறு
வடிவில் உள்ளது.
தலவிருட்சம் : வன்னி, வில்வம்.
தலச்சிறப்பு : மேலைத் திருக்காட்டுப்பள்ளி
அக்னீஸ்வரர் கோவில் 5 நிலை கோபுரத்துடனும், 3
பிரகாரங்களைக் கொண்டுள்ளது.
இத்தலம் முதலாம் ஆதித்த சோழன் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. அக்னி
பகவான் இத்தல இறைவனை வழிபட்டதால் இத்தலத்திற்கு "அக்னீஸ்வரம்"
என்ற பெயர் ஏற்பட்டது. அக்னி பகவான் சிவபெருமானை வழிபட ஏற்படுத்திய அக்னி
தீர்த்தம் இன்றும் கிணறு வடிவில் உள்ளது. மூலவர் அக்னீஸ்வரர்
சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். சிவலிங்கம் வடிவம் உருவில்
சிறியது. சிவலிங்கத்தின் சிரசின் மீது ஐந்து நாகங்கள் படமெடுக்கும் தோற்றம்
காணலாம். மூலவரைச் சுற்றி வரும் பிராகாரத்தில் கோஷ்ட மூர்த்தமாக யோக தட்சிணாமூர்த்தி
மற்றும் உள் பிராகாரத்தில் விநாயகர் உள்ளார். இலிங்கோத்பவர், தனி சந்நிதியிலும் மேற்கு
கோஷ்டத்தில் அர்த்தநாரீஸ்வரரும் காட்சியளிக்கின்றனர். அடுத்து வள்ளி தெய்வயானை
சமேத ஆறுமுகப் பெருமான், காசி
விசுவநாதர் விசாலாட்சி, கஜலட்சுமி, துர்க்கை சந்நிதிகள் உள்ளன.
இறைவி சௌந்தரநாயகி தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறாள்.
இறைவன் சந்நிதிக்கு இடது பக்கத்தில் பிரம்மாவிற்கு தனி சந்நிதி
உள்ளது. இத்தலம் பிரம்மாவிற்கு ஏற்பட்ட சாபம் நீங்கிய தலம் ஆகும்.
பிரம்மா இத்தலத்தில் இறைவனை வணங்கி மும்மூர்த்திகளில் ஒருவர் என்ற அங்கீகாரம்
தரவேண்டும் என்று பிரார்த்தனை செய்தார். சிவன் அவருக்கு தனியிடம் தந்து தங்க
அனுமதித்தார் என்று இத்தலத்தில் உள்ள கல்வெட்டு கூறுகிறது.
இத்தலத்தில் விஷ்ணு ஸ்ரீனிவாச பெருமாள் என்ற திருநாமத்துடன் தனி
சந்நிதியில் அருள்பாலிக்கிறார்.
இத்தலத்திலுள்ள இரண்டாம் பிரகாரத்தில் இரண்டு
தட்சிணாமூர்த்திகள் உள்ளனர். குரு தட்சிணாமூர்த்தியின் அடிப்பகுதியில்
உள்ள துவாரம் வழியே மற்றொரு தட்சிணாமூர்த்தியைப் பார்க்கலாம்.
நவக்கிரக சந்நிதியில், எல்லாக் கிரகங்களும் சூரியனைப்
பார்த்தவாறே அமைந்துள்ளது சிறப்பு ஆகும். இத்தலத்தில் உள்ள யோக
தட்சிணாமூர்த்தி மிகவும் விசேஷமானவர். இவர் குரங்காசனத்தில் அமர்ந்து, இரண்டு திருக்கரங்களுடன்
கழுத்தில் மகரகண்டி ருத்திராஷம் அணிந்து, திருச்சடையில் சூரிய, சந்திரன் அணிந்து யோக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
இத்தலத்தில் சுந்தர பாண்டியன், கோனேரின்மை கொண்டான் காலத்து கல்வெட்டுக்கள் உள்ளன. இவ்விரு
கல்வெட்டுக்களில் அம்மன் பெயர் அழகமர்மங்கை எனக் குறிக்கப்பிடப்பட்டுள்ளது.
இத்தலத்தில் நான்கு கால நித்திய பூஜைகள் நடைபெறுகின்றன. இத்தலத்தில் கும்பாபிஷேகம் 1983
ம் ஆண்டில் நடைபெற்றுள்ளது.
முதல் ஆதித்திய சோழனின் காலத் திருப்பணியைப் பெற்ற கோயில்.
"பள்ளி”என்ற சொல்லைக் கொண்டு இவ்வூரில்
ஒரு காலத்தில் சமணர்கள் வாழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதற்கேற்ப
24-வது
தீர்த்தங்கரரின் சிலை இத்தலத்தில் கிடைத்துள்ளது என்று கூறப்படுகிறது.
இத்தலம் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளி எனும் ஊரில்
அமைந்துள்ளது. இந்த ஊரின் பெயர் புராணக் காலத்தில்
மேலைத்திருக்காட்டுப்பள்ளி என்று அழைக்கப்பட்டுள்ளது.
தல வரலாறு : புராண காலத்தில் தேவர்களும், அவர்கள் தலைவனான இந்திரனும்
இத்தலத்திற்கு வந்து இறைவனை வணங்கினர். அப்போது அக்னிதேவன் தான் தொட்ட
பொருட்கள் யாவும் சுட்டெரிக்கப்பட்டு நாசமாகி விடுகிறதென்றும் அதனால்
ஏற்படும் பழியிலிருந்து விடுபட வழி சொல்ல வேண்டுமென்றும் இறைவனிடம்
முறையிட்டான். இறைவன் சிவன் அக்னிதேவன் முன் தோன்றி இத்தலத்தில் ஒரு
குளம் அமைத்து அதற்கு அக்னி தீர்த்தம் என்று பெயரிட்டு அந்த குளத்து நீரைக்கொண்டு
தன்னை அபிஷேகம் செய்தால் என்னை வழிபடும் உனக்கு அந்தப் பழி தீரும் என்றும்
அதில் நீராடும் பக்தர்களுக்கும் அவர்கள் செய்த பாவங்கள் தீரும் என்றும்
வரமளித்தார். இந்த தீர்த்தத்தில் கார்த்திகை ஞாயிறு, மாசிமகம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் முதலிய
நாள்களில் நீராடி வழிபடுவோர் எல்லா நலன்களும் பெறுவர்.
உறையூரிலிருந்து ஆண்டு வந்த மன்னன், உறையூர் நந்தவனத்தில்
இறைவனுக்குரியதாக பூத்துவந்த செவ்வந்தி மலர்களைப் பணியாளன் பறித்து வந்து தர, அவற்றைப் பெற்று தன் இரு
மனைவியருக்கும் தந்தான். மூத்தமனைவி அம்மலரைச் சிவபெருமானுக்கு
அணிவித்து வந்தாள். இளையவள் தான் சூடி மகிழ்ந்தாள். இதனால் இளையவள்
இருந்த உறையூர் மண் மாரியால் அழிந்தது. மூத்தவள் இருந்த
திருக்காட்டுப்பள்ளி மட்டும் அழியாமல் பிழைத்தது எனக் கூறுவர்.
வழிபட்டோர் : திருமால், பிரம்மன், சூரியன், பகீரதன், உறையூர் அரசி.
பாடியோர் : திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்.
நடைதிறப்பு : காலை 6.00
மணி முதல் 11.00
மணி வரை, மாலை 4.00
மணி முதல் இரவு 8.30
மணி வரை.
திருவிழாக்கள் :
மாசி மகம்,
பங்குனி பெருவிழா,
சிவராத்திரி,
ஐப்பசி அன்னாபிஷேகம்,
மார்கழி திருவாதிரை.
அருகிலுள்ள நகரம் : தஞ்சாவூர்.
கோவில் முகவரி : அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோவில்,
திருக்காட்டுப்பள்ளி அஞ்சல் - 613 104, தஞ்சாவூர் மாவட்டம்.
#அருள்மிகுஅக்னீஸ்வரர்திருக்கோவில்திருக்காட்டுப்பள்ளிதஞ்சாவூர்மாவட்டம்
Comments
Post a Comment