💥💥இன்று ஓர்
ஆலயம்💥💥
அருள்மிகு நாகராஜா திருக்கோவில்
மூர்த்தி : அனந்த கிருஷ்ணன், சுப்ரமணிய சுவாமி, துர்க்கையம்மன், ஸ்ரீ தர்ம சாஸ்தா.
தீர்த்தம்: நாகதீர்த்தம்.
தலவிருட்சம் : ஓடவள்ளி.
தலச்சிறப்பு : இக்கோவில் ஒரு நாகதோஷ பரிகார தலம். இங்கு மாதக்
கார்த்திகைகள் விசேஷம் தருவதாக கருதப்படுகிறது. இக்கோவிலுக்கு
வெளியில் உள்ள தல விருட்சத்தை சுற்றி நாக சிலைகள் உள்ளன. இதில் மஞ்சள்
மற்றும் பால் அபிஷேகம் செய்வது சிறப்பு ஆகும். இந்த தலத்தில் மூலவர்
நாகராஜாவின் எதிரில் உள்ள தூணில் நாகக்கன்னி சிற்பம் இருக்கிறது.
கருவறையில் நாகராஜா இருக்கும் இடம் மணல் திட்டாக உள்ளது. வயல் இருந்த இடம்
என்பதால் எப்போதும் இவ்விடத்தில் நீர் ஊறிக்கொண்டே இருக்கிறது. இந்த
நீருடன் சேர்ந்த மணலையே, கோவில்
பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்குகிறார்கள்.
இந்த மணலானது ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை கருப்பு
நிறத்திலும், தை மாதம் முதல் ஆனி மாதம்
வரை வெள்ளை நிறத்திலும் மாறிக் கொண்டே இருக்கிறது. இந்த தலத்தில் உள்ள
துர்க்கை சிலை, இங்கு உள்ள நாக தீர்த்தத்தில்
கிடைத்தது. அதனால் அன்னை "தீர்த்த துர்க்கை" என்று
அழைக்கப்படுகிறாள். துர்க்கை அம்மன் கிடைத்த நாக தீர்த்தத்தில் செவ்வாய்க்கிழமை
அன்று ராகு காலத்தில் நீராடி பால் அபிஷேகம் செய்து, நெய் தீபம் மற்றும் எலுமிச்சைப்
பழ தீபம் ஏற்றி வழிபட்டால் நாக தோஷங்கள் உடனே அகலும் என்பது
பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.
தல வரலாறு : இங்கு நாகராஜர் கோவில் ஏற்பட்டதற்கு பல காரணக் கதைகள்
கூறப்படுகின்றன. இதோ! அவைகளில் சில : புல், புதர், செடி, கொடிகள் என்று இருந்த
இந்தக்காட்டில் புல் அறுக்கும் பெண் ஒருத்தி, மாட்டிற்குப் புல் அறுக்கும் போது, அவள் கையில் இருந்த அரிவாள் ஐந்து
தலைநாகம் ஒன்றின் தலையில் பட்டு ரத்தம் பீறிட்டது. இதைக்கண்டு பயந்து
நடுங்கிய அப்பெண், பக்கத்தில்
உள்ள கிராம மக்களை அழைத்து வந்தாள். அவர்கள் கூட்டமாக வந்து பார்க்கும்போது,
அந்த ஐந்து தலைநாகம் சிலையாக
காணப்பட்டது. கிராம மக்கள், ஒரு சிறிய தென்னங்கீற்றால் வேயப்பட்ட கூரைக்கோவில் கட்டி
வழிபட்டு வந்தனர். நாளடைவில் அக்கம் பக்கத்து கிராம மக்கள் கூட்டம்
கூட்டமாக வந்து, நாகராஜரை தரிசித்துச் சென்றதில், ஆலயம் மிகப் பிரபலமாயிற்று.
தமிழகத்துக் கோவில்களில் வேறு எங்கும் காணப்படாத தனிச்சிறப்பு, ஆலயத்தின் மூலஸ்தானத்தின்
மேல்கூரைத் தென்னை ஓலையால் வேயப்பட்டதாகும்.
உதய மார்த்தாண்டவர்மா மன்னர், இக்கோவிலை புதுப்பித்து கொண்டிருந்தபோது, ஒரு நாள் மன்னர் கனவில் நாகராஜர்
தோன்றி, "ஓலைக்கூரையாலான
இருப்பிடத்தையே நான் மிகவும் விரும்புகிறேன். முதன் முதலில்
அக்கூரையினடியில் தான் வாசம் செய்தேன். ஆதலால் அதை மாற்ற வேண்டாம்'' என்று கூறியதால் இன்றும் மூலஸ்தானத்தின் மேல்கூரைத் தென்னை
ஓலையால் வேயப்பட்டு
உள்ளது.
நடைதிறப்பு : காலை 4.00
மணிமுதல் பகல் 12.00
மணிவரை. மாலை 5.00
மணிமுதல்இரவு 8.30
மணிவரை.
பூஜைவிவரம் : ஆறுகாலபூஜைகள்.
திருவிழாக்கள் :
ஆவணித் திருவிழா – நான்கு ஞாயிற்றுக்கிழமைகள் உற்சவம்.
தைஉற்சவம் – தேர் திருவிழா 10
- நாட்கள் 9 –ம்நாள் திருத்தேர்.
அருகிலுள்ள நகரம் : நாகர்கோயில்
இருக்குமிடம் : கன்னியாகுமரியிலிருந்து 20 கி.மீ.
கோயில்முகவரி:அருள்மிகு நாகராஜா சுவாமி திருக்கோயில்,
நாகர்கோவில் - 629 001, கன்னியாகுமரி மாவட்டம்.
தொலைபேசி எண் : 04652-232420
Comments
Post a Comment