💥💥இன்று ஓர்
ஆலயம்💥💥
ஸ்ரீ யதோக்தகாரி பெருமாள் திருக்கோவில்
சுவாமி : யதோக்தகாரிப்பெருமாள்.
அம்பாள் : ஸ்ரீ கோமாளவல்லி தாயார்.
தீர்த்தம் : பொய்கை புஷ்கரணி.
விமானம் : ஸ்ரீ வேதஸார விமானம்.
தலச்சிறப்பு : இத்திருக்கோயிலின் இராசகோபுரம்
மேற்கு நோக்கியும், மூலவர் சொன்ன வண்ணம் செய்த
பெருமாள் மேற்கு நோக்கித் திருமுகம் கொண்டுள்ளார். பொய்கை ஆழ்வார் அவதரித்த
தலம். கோமளவல்லித் தாயார் தனிச் சந்நதியில் எழுந்தருளிய அருள்புரிந்து
கொண்டு உள்ளார். ஆழ்வார்களில் ஒருவாரான ஆண்டாள் நாச்சியாருக்கு
இத்திருக்கோயிலில் தனிச் சந்நிதியுள்ளது. (நாச்சியார் நின்ற
திருக்கோலத்தில் சுமார் 6 அடி உயரத்தில் சிலையாக உள்ளார்
சிற்பக் கலைக்கு ஒரு உதாரணமாக அவ்வளவு தத்ரூபமாக சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பார்க்க வேண்டிய ஒன்றாகும்) பொதுவாக திருமால் எழுந்தருளியுள்ள
தலங்களில் சயன திருக்கோலமானது இடமிருந்து வலமாக அமைந்திருக்கும். ஆனால்
இங்கு மட்டும் யதோக்தகாரிப்பெருமாள் வலமிருந்து
இடமாகச் சயனித்துள்ளார் என்பது சிறப்பாகும்.
தல வரலாறு : ஒரு முறை பிரமன் -நான்
முகக்கடவுள் மகாவிஷ்ணுவைக் காணவேண்டித் தவம் செய்கையில், வானத்தில் ஒர் அசரீரி வாக்குத்
தோன்றியது. அதாவது, தொண்டை நாட்டிலுள்ள சத்திய
விரத சேத்திரத்திற்குச் சென்று ஒரு அசுவமேத யாகம் இயற்றி 1000
அசுவமேதயாகப் பலனைப் பெற்று
திருமாலைத் தரிசிப்பாயாக என்றது. நான்முகன் காஞ்சியை அடைந்து யாகத்தை
நடத்த முயற்சிகளை மேற்கொண்ட போது ப்ருஹஸ்பதியாகிய குரு, நான்முகனின் பத்தினியாகிய
சரஸ்வதிதேவி இல்லாமல் யாகம் நடைபெறாத என்று கூற, பிரம்மா, வசிட்டரை அழைத்து சரஸ்வதி
தேவியை அழைத்தவர அனுப்பினார்.
பிரம்மனுக்கும், சரஸ்வதிக்கும் கருத்து மாறுபாட்டினால், சரஸ்வதி தேவியானவள் பிரம்மனைப்
பிரிந்தச் சென்று - தன் அம்சமான சரஸ்வதி நதியை அடைந்து வாழ்ந்துவந்தாள்.
இந்தச் சூழ்நிலையில் வசிட்டார் சென்று அழைத்த போது சரஸ்வதி தேவி தான் வர
இயலாது, வேண்டுமானால்
தானிருக்கும் இடத்திற்கு எழுந்தருளிய யாகத்தை நடத்தலாம் என்று கூறி,
யாகத்திற்கு வருவதை
மறுத்துவிட்டார். வசிட்டார் எவ்வளவு கூறியும் யாகத்திற்குச் சரஸ்வதி
தேவி வராததால் சதய மஹரிசிகளும் சாவித்திரி முதலிய மற்றைய மனைவியர்களை
அருகில் வைத்தக் கொண்டு பிரமன் யாகத்தைத் தொடங்கினார்.
யாகத்தில் அசுரர்களுக்கு முதல் மரியாதை தரப்படாத காரணத்தால்
அசுரர்கள் ஒன்று கூடி அதில் விரோசனன் ஆலோசனையின் பேரில் சரஸ்வதியிடம் சென்று
கலைமகளே உங்கள் கணவர் தீய எண்ணம் கொண்ட முனிவர்களின் தூண்டுதலின் பேரில்
உம்மை நீக்கி, மற்ற மஹரிஷிகளோடு கூடி
யாகம் செய்யத் தொடங்கி இருக்கிறார். இதை எப்படியாவது நீங்கள் தடுக்க
வேண்டும் எனக் கூறினார். அது கேட்ட சரஸ்வதி தன் கணவர் செய்யும்
யாகத்தைத் தடுக்க எண்ணி ஸஹ்ய மலையினின்று கிளம்பி வேகவதி என்னும் பெயரில்
நதியாகப் பெருகி சத்திய விரத சேத்திரத்திற்கு வந்து சேர்ந்தாள்.
அந்த நதியின் பெருக்கு வேகத்தைப் பார்த்து யாகச் சாலையிலுள்ள
அனைவரும் பயந்து நான்முகனைச் சரண் அடைந்தனர். பிரமன் ஞானதிருட்டியால்
பார்த்து, இக்காரியம் அசுரர்களின்
தூண்டதல் பேரில் நடைபெற்று உள்ளது என்பதை அறிந்து பிரமன் நாராயணனை மனதில்
எண்ணினார். உடனே நாராயணன் பிரமனின் முன் தோன்றி, கவலை அடையாதே என்று கூறி,
வெள்ளமாக வரும் வேகவதி ஆற்றில்
இரங்கித் தடையாக - அணையாகச் சயனித்துக் கொண்டார். அந்தகாட்சியைக் கண்ட
சரஸ்வதி நாண முற்று மேலே பெருக்கிச் செல்ல முடியாமல் அந்நதர்வாஹினியாய்ச்
சென்று கடலில் கலந்தாள்.
யதோக்தகாரி என்று சொல்லப்படும் அப்பெருமானது தென்புறமாகச் செல்லத்
தொடங்கிய வேகவதியை - சரஸ்வதியை முனிவர்கள் வணங்கி தாயே இனியாவது தாங்கள்
வந்து நாதரோடு(பிரம்மனோடு) கூடி இந்த யாகத்தை நிறைவு செய்ய வேண்டும் எனக்
கூறினார். கலைமகளும் விரைந்து வந்து தன் கணவர் நடத்தும் யாகத்தில்
கலந்து கொண்டார். நான்முகனார் நடத்திய யாகத்தைக் காக்க வந்து வேகவதி
ஆற்றின் பிரவாகத்தின் குறுக்கே அணையாக வலது கை கீழ்பட சயனித்துக் கொண்டு
அருளிய படியால் இப்பெருமாள் புஜங்க சயனன் திருவணைப்பள்ளி கொண்ட பெருமாள்
என்கிற திருநாமத்தோடு திகழ்கின்றார் என்பது புராண வரலாறாகக் கூறுவர்.
நடைதிறப்பு : காலை 7.30
மணி முதல் 9.30
வரை, மாலை 5.00
மணி முதல் 7.00
மணி வரை.
அருகிலுள்ள நகரம் : காஞ்சிபுரம்.
கோயில் முகவரி : ஸ்ரீ யதோக்தகாரி பெருமாள்
திருக்கோவில்,
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம்.
Comments
Post a Comment