💥💥இன்று ஓர் ஆலயம்💥💥

🔥🔥ஸ்ரீரங்கநாதசுவாமி திருக்கோவில்🔥🔥
சுவாமி : அருள்மிகு ரங்கநாதர்.
மூர்த்தி : தாயார் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி, உடையாழ்வார் (ராமானுஜர்  சன்னதி), கருடாழ்வார் சன்னதி, தன்வந்திரி சன்னதி, ஹைகிரிவர் சன்னதி.
புனித நீர் : சந்திர தீர்த்தம் மற்றும் 8 தீர்த்தங்கள்.
தலச்சிறப்பு :  இத்தலத்தில் மிகப்பிரம்மாண்டமாக அமைந்துள்ள திருக்கோவிலே ஸ்ரீ  ரங்கநாதசுவாமி திருக்கோவிலாகும்.  108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையானதாக  கருதப்படும் இத்தலம் "பூலோக வைகுண்டம்" என்று அழைக்கப்படுகிறது.  லட்சுமி தேவி தினமும்  வந்து பூஜிக்கும் ஸ்தலமாகும்.  மதுரகவி ஆழ்வாரை தவிர மற்ற 11 ஆழ்வார்களால் 247  பாசுரங்களால் ஸ்ரீ அரங்கனை போற்றி மங்களாசாசனம் செய்த ஸ்தலமாகும்.  கவிசக்கரவர்த்தி  கம்பர், கம்பர் இராமாயனத்தை இத்தலத்தில் தான் அரங்கேற்றினார் (தாயார் சன்னதிக்கு அருகில்).
ஸ்ரீவைஷ்ணவத்தின் ஆதாரத் தூணாகிய உடையவர் எம்பெருமானார் ஸ்ரீராமானுசரும், இன்னும் பல  அடியார்களும் இத்திருத்தலத்தினை மையமாகக் கொண்டே ஸ்ரீவைஷ்ணவத்தைப் பரப்பியுள்ளார்கள்.  முதன்மை பெற்ற இத்திருத்தலத்தை ஆழ்வார் பெருமக்களும், ஆச்சார்யார்கள்பகவத் பாகவதர்கள் மற்றும் சேர, சோழ, பாண்டிய, ஹொய்சாள மற்றும் விஜயநகர முதலான  மன்னர் மரபினர், அடியவர்கள் என பல வகையினரும் பரவி போற்றியுள்ளனர்.
ஸ்ரீரங்கநாதரின் பெருமையை கருடபுராணம், பிரும்மாண்ட புராணம், ஸ்ரீரங்க பிரும்ம வித்தைஸ்ரீரங்க மாகாத்மியம், ஸ்ரீ குண ரத்ன கோசம், ஸ்ரீ பாதுகா சகஸ்ரம் முதலிய நுல்களில் மிகத்  தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.  அரங்கர் வருகைக்கு முன்னமே தோன்றிய சந்திர புஷ்கரணி என்னும் தீர்த்தம் புண்ணிய தீர்த்தமாக விளங்குகிறது. 156 ஏக்கர் பரப்பளவில் உலகிலேயே 7 பிரகாரங்களைக் கொண்டதும், 21 கோபுரங்கள், 9 தீர்த்தங்களையும் உள்ளடக்கிய புராதன ஆலயங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.
தல வரலாறு : முன்னொரு சமயம் படைப்பின் நாயகனான ஸ்ரீ பிரம்மதேவரின் கடுந்தவத்திற்கு அருள்புரிந்து, ஸ்ரீ மகா விஷ்ணு ஸ்ரீரங்க விமானத்தை பிரம்ம தேவருக்கு அளித்தார்.  விமானத்தினுள் ஸ்ரீ வைகுண்டமே அடங்கியிருந்தது.  பலகாலம் பூஜித்த பிரம்ம தேவர் ஸ்ரீ ரங்க  விமானத்தை இந்திரனுக்கு வழங்கினார்.  இந்திரனும் பலகாலம் பூஜித்து அதை சூரிய தேவனுக்கு  வழங்கினார்.  சூரிய தேவனும் பலகாலம் பூஜித்து சூரிய குலமான இஷ்வாகு  மன்னனுக்கு அளித்தார்.  
இஷ்வாகு மன்னனும் அவரது குலத்தோன்றல்களும், இவ்விமானத்தை  பூஜித்து வந்தனர்.  இக்குலத்தில் தோன்றிய தசரத மன்னனின் புதல்வனான ஸ்ரீ ராமபிரானும் பூஜித்து வந்தார்.   இராவணனின் வதம் முடிந்த பிறகு அயோத்தியில் நடைபெற்ற ஸ்ரீ ராமபிரானின்  பட்டாபிஷேகத்திற்கு வந்திருந்த, ஸ்ரீ விபீஷ்ணனுக்கு இவ்விமானத்தை பரிசாக அளித்து பூஜிக்க  கூறினார் ஸ்ரீராமர்.


விபீஷ்ணனும் மிக்க மகிழ்ச்சியோடு இவ்விமானத்தை இலங்கைக்கு கொண்டு செல்லும் வழியில்,  காவேரி நதிக்கரையில் சந்திர புஷகரணிக்கருகில் இவ்விமானத்தை கீழே இறக்கி மாலை வேலை  சந்தி கடன்களை செய்ய சென்றார்.  மீண்டும் வந்து விமானத்தை தன்னுடன் எடுத்துச் செல்ல தூக்க  முயன்ற போது, அவரால் அசைக்க முடியவில்லை.  விபீஷ்ணன் மிகவும் மனம் வருந்தி ஸ்ரீ  ரங்கநாதரை வேண்டினார்.
ரங்கநாதரோ அசரீரியாக யாம் காவேரி கரையிலேயே தங்க விரும்புவதாக கூறினார்.  யாம்  எப்போதும் உனது இலங்கை நோக்கியே காட்சி தருவோம் என்று கூறினார்.  அதன் படியே  அன்றிலிருந்து ஸ்ரீரங்கநாதர் தெற்கு நோக்கியே அருள் பாலிக்கிறார்.  தர்மவர்மசோழன் முதன்  முதலில் இப்பெருமாளுக்கு சிறு கோவிலை கட்டினார்.  அதன் பிறகு பல அரசர்களின் முயற்சியால்,  இப்பிரம்மண்ட கோவில் கட்டப்பட்டுள்ளது.
ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீரங்கத்தை தலைமையிடமாகக் கொண்டு விசிஷ்டாத்வைத என்ற சித்தாந்தத்தை  நாடு முழுக்க பரப்பினர்.  ஸ்ரீ ராமானுஜரின் திருமேனி வசந்த மண்டபத்தில் இப்பொழுதும் நாம்  காணலாம். அவருடைய பூத உடல் கெடாதவாறு இருக்க மூலிகை சாந்து பூசி வைத்திருகிறார்கள்.
கோவிலின் கட்டடக்கலை :  காவிரி ஆற்றினால் சூழப்பட்டதும், சிறப்பு மிக்க 108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மையான மிகப் பெரிய அரங்கநாத சுவாமி கோயிலின் ஏழு சுற்று  மதில்களுக்குள் அமைந்துள்ளதுமான திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) என்னும் ஊர், 600 ஏக்கர் பரப்பளவு  கொண்ட ஒரு தீவு நகரம் ஆகும்.  இச்சுற்று மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள்  அமைக்கப்பட்டுள்ளன.  இதன் வெளிப்புறச் சுற்று மதிலின் அளவு 950 x 816 மீட்டர் ஆகும்.   இவற்றுள் மிகப் பெரிதான இராஜகோபுரம், 72 மீட்டர் (220 அடி) உயரத்துடன்,  தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகின்றது.  இது 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
முதலில் தர்மவர்ம சோழன் கட்டிய திருவரங்கம் கோயில் காவிரியின் வெள்ளப் பெருக்கினால்  மண்ணில் புதையுண்டு மறைந்தது.  பின்னர் கிளிச் சோழன் ஒரு கிளியின் உதவியுடன்  ("வைகுந்தத்திலுள்ள விஷ்ணுவின் கோயில் இருந்த இடம் இதுதான்; அக்கோயிலை இப்போதும்  இங்கு காணலாம்" என்று ஒரு செய்யுளை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தது) மற்றும்  அவனுக்கு வந்த கனவின் மூலமாக விமானம் இருந்த இடத்தைக் கண்டுபிடித்தான்.  விமானத்தின்  கருவறையைச் சுற்றிக் கோயில் எழுப்பினான்.
நடைதிறப்பு :   காலை 6.00 - 7.30 மற்றும் காலை 9.00 - 12.00, நண்பகல் 1.30 மணி முதல் மாலை  5.30 மணி வரைஇரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை.
தரிசனம் :-
ரங்கநாதர் சன்னதி------ரங்கநாயகித் தாயார் சன்னதி 
விஸ்வரூப சேவை 6:00-7:15 ------6:30-8:00
பூஜை (பக்தர்களுக்கு மூடப்பட்டது) 7:15-9:00------8:00-8:45
தரிசனம் 9:00-12:00-------8:45-13:00
பூஜை (பக்தர்களுக்கு மூடப்பட்டது) 12:00-13:15--------13:00-15:00
தரிசனம் 13:15-17:45---------15:00-18:00
பூஜை (பக்தர்களுக்கு மூடப்பட்டது) 17:45-18:45---------18:00-18:45
தரிசனம் 18:45-20:45------------18:45-21:00
அருகிலுள்ள நகரம் : திருச்சி.
சிறப்பு பூஜை : பாஞ்சராத்திரம்.
பாட்டு:
குடதிசைமுடியைவைத்துக் குணதிசைபாதம் நீட்டி
வட திசைபின்பு காட்டித் தென்திசையிலங்கை நோக்கி
கடல்நிறக் கடவுளெந்தை அரவணைத்துயிலிமாகண்டு
உடலொனக்குருகுமாலோ என்செய்கேனுலகத்தீரே.
சங்கம் மறுவிய காலத்தில், மதுரகவி ஆழ்வார் நீங்கலாக அனைத்து ஆழ்வார்களும் (கி.பி. 5-ம்  நூற்றாண்டிலிருந்து 9-ம் நூற்றாண்டு வரை) திருவரங்கத்தானை பற்றி பாடியுள்ளனர்.  நாலாயிர   திவ்விய பிரபந்தத்தில், 247 பாசுரங்கள் திருவரங்கத்தான் மேல்தான்.
திருமங்கை ஆழ்வார் 73
தொண்டரடிப்பொடி ஆழ்வார் 55
பெரியாழ்வார் 35
குலசேகராழ்வார் 31
திருமழிசையாழ்வார் 14
நம்மாழ்வார் 12
திருப்பாணாழ்வார் 10
ஆண்டாள் 10
பூதத்தாழ்வார் 4
பேயாழ்வார் 2
பொய்கையாழ்வார் 1
கோவில் முகவரி : அருள்மிகு ரங்கநாதசுவாமி திருக்கோவில்,
ஸ்ரீரங்கம், திருச்சி - 620 006.
தொலைபேசி எண்: +91 - 431 - 2432246.

விஜய் சுவாமிஜி,
செல் :+91 9443351497 , 9842499006.

#ஸ்ரீரங்கநாதசுவாமிதிருக்கோவில்ஸ்ரீரங்கம்திருச்சி



Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :