உழைப்பவரைத் தேடி வரும் உயர்வு :

ஒரு வீட்டில் திருமணம் என்றால் பட்டுப்புடவை, நெய் பலகாரங்கள்.இன்னொரு வீட்டிலோ நூல் புடவைக்கு கூட கடன் வாங்க வேண்டிய நிலை.இதற்கு காரணம் என்னவென்று ஆராய்ந்தால், முதலாமவர் கடும் உழைப்பாளியாய் இருந்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. ஒரு கிராமத்தில் மழை பொய்த்து விட்டது. விவசாயிகள் பயிரே செய்யவில்லை. வயல்வெளியை விட்டு சற்று தள்ளியிருந்த குளத்தில் சிறிதளவே தண்ணீர் இருந்தது. இதை ஒரு விவசாயி போய் பார்த்தான். இருக்கிற இந்த குறைந்த நீரை நமது வயல் வரைக்கும் கொண்டு வந்து விட்டால் பயிர் விளைந்து விடும். அதற்கு தேவை சிறிய ஓடை. நாமே அந்த ஓடையை வெட்டிவிட்டால், இந்த தண்ணீரை வயல்வரை கொண்டு வந்து விடலாம். நமது பயிர் எப்படியாவது விளைந்து விடுமென நினைத்தான். முயற்சியைத் தொடங்கிவிட்டான். ஓடைப்பணி வேகமாக நடந்தது. இதே வேகத்தில் பணிநடந்தால் மாலைக்குள் முடிந்து விடுமென்ற நிலை. அவனது மனைவி சாப்பாட்டுடன் வயலுக்கு வந்தாள்.
""என்னங்க! நீங்க வெட்டிவேலை செய்துகிட்டு இருக்கீங்க! குளத்துநீர் நம் வயலை எட்டாது. இப்பதான் பாதிதூரமே ஓடை வெட்டியிருக்கீங்க! முழுசா வெட்டினா கூட தண்ணீர் வயலை எட்டுமோ எட்டாதோ!'' என்று அவனுக்கு நம்பிக்கை குறைவை ஏற்படுத்தும் வகையில் பேசினாள். அவனுக்கு கோபம் வந்து விட்டது. ""போடி போ! இந்தமுறை விளையாவிட்டால் நீயும், நம் குழந்தைகளும் பட்டினி கிடப்பீர்கள்! எப்படியும் இதை முடித்தே தீருவேன், அதுவரை சாப்பிடக்கூட மாட்டேன்,'' என்று சொல்லி அவளை அனுப்பிவிட்டு பணியைத் தொடர்ந்தான்.
மாலையில் தண்ணீர் வயலுக்குள் பாய ஆரம்பித்து விட்டது. மற்றவர்கள் செய்யாததை அவன் செய்தான். அறுவடையாகி நெல் அவன் வீட்டுக்கு வந்தது. நல்ல வருமானமும் கூட. அந்த ஆண்டு அவன் மகள் திருமணம் மிகச்சிறப்பாக நடந்தது. உங்கள் இல்லத்திலும் வருமானம் பெருக, இனிமை திகழ கடுமையாக உழையுங்கள். சிக்கனமாக இருங்கள். நிறைய பணம் சேருங்கள். மற்றவர்களின் வருமானத்தைப் பார்த்து பொறாமைப்படாமல், அவர்களது பின்னணியில் உள்ள உழைப்பைப் பாருங்கள்! பிறகென்ன! நீங்களும் கார், பங்களாவுக்கு சொந்தக்காரர் ஆகலாம்.

Comments

Popular posts from this blog

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்