கும்பம் பூஜிப்படுவதன் காரணம் :
உலகம் படைக்கப்படுவதற்கு முன் பகவான் மகாவிஷ்ணு பாற்கடலில் பாம்பணையின் மேல் சாய்ந்தவாறு அமர்ந்திருந்தார். அவருடைய நாபிக் கமலத்திலிருந்து ஒரு தாமரை வெளிப்பட்டு அந்த மலரிலிருந்து படைப்புக் கடவுளான பிரம்மா தோன்றினார். பிரம்மாவே உலகத்தை சிருஷ்டித்தார்.
கும்பத்தில் உள்ள நீரானது எந்த நீரிலிருந்து படைப்பில் உள்ள அனைத்தும் தோன்றியதோ அந்த நீரைக் குறிக்கிறது. அந்தப் புனித நீர்தான் அனைத்திற்கும் உயிர் அளிக்கும் சக்தி படைத்தது. இந்த நீர் எண்ணிலடங்கா உருவங்களையும் வடிவங்களையும் உயிர்த் துடிப்பும் உணர்வும் உள்ள பொருள்கள் மற்றும் சடப் பொருள்கள் ஆகிய அனைத்தையும் படைக்கும் சக்தியைத் தன்னுள் அடக்கியுள்ளது.
கும்பத்தில் உள்ள இலைகளும் தேங்காயும் சிருஷ்டியைக் குறிக்கின்றன. கும்பத்தைச் சுற்றியுள்ள நூல் படைப்பில் உள்ள அனைத்தையும் ஒன்றாகப் பிணைக்கும் அன்பைக் குறிக்கிறது. ஆகவேதான் கும்பம் புனிதமாகக் கருதப்பட்டு பூஜிக்கப்படுகிறது.
புனிதமான நதிகளின் நீர், அனைத்து வேதங்களின் சாரம் மற்றும் அனைத்து தேவதைகளின் ஆசி ஆகியவை கும்பத்தில் உள்ள நீரில் வந்து சேரவேண்டுமென்று பிரார்த்திக்கப்படுகிறது. பின்னர் கும்பத்திலுள்ள நீர் அபிஷேகத்திற்கும் மற்ற சடங்குகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆலய கும்பாபிஷேகத்தில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கும்பங்களில் உள்ள புனித நீர் ஆலய கோபுரக் கலசங்களின் மேல் ஊற்றப்படுகிறது.
அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அமுத கலசத்தை ஏந்தியவாறு இறைவன் தோன்றினார். இவ்வமுதம் அனைவருக்கும் இறவாவரத்தை அருளியது. எனவே கலசமும் இறவாத் தன்மையைக் குறிக்கிறது.
Comments
Post a Comment