#மார்கழிதிங்கள்
💥💥மார்கழி திங்கள்💥💥
ஆண்டாள் அருளிய திருப்பாவையின் முதல் எழுத்து, திருவெம்பாவையை அருளிய மாணிக்கவாசகரின் முதல் எழுத்தான மாவிலும் மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை, திருப்பாவையை அருளிய ஆண்டாளின் முதல் எழுத்தான விலும் ஆரம்பித்துள்ளது அற்புதம்.

இம்மாதம் பீடுடைய மாதம். அதாவது மிடுக்கான தெய்வ வழிபாட்டிற்கான மாதம். இது புரியாமல் மார்கழியை பீடை மாதம் என்று கூறுவது தவறு.

இம்மாதத்தில்தான் ஹேமந்த ருது தொடங்குகிறது. எங்கும் பரங்கி, செவ்வந்தி, மஞ்சள் என மஞ்சள் வண்ணமாக காட்சி தருவதால் இம்மாதம் பீத மாதம் என்றும் அழைக்கப்படும். பீதம் என்றால் மஞ்சள் என்று பொருள்.மிருகசீரிஷம், திருவாதிரை நட்சத்திரங்களில் பௌர்ணமி நிலவு இம்மாதத்தில் சஞ்சரிக்கும். அதுவே மார்கசீரிஷம் என்றாகிமார்கழியானது.

ஆண்டாள் மார்கழி மாதத்தில்தான் பாவை நோன்பைக் கடைப்பிடித்து, காத்யாயனி தேவியை வழிபட்டு, அரங்கனை கரம் பிடித்தாள்.

திரு எனும் அடைமொழியை பெற்ற நட்சத்திரங்கள் திருவோணம், திருவாதிரை. இதில் திருவோண நாயகனாம் திருமாலுக்கு வரும் வைகுண்ட ஏகாதசி விழாவும் திருவாதிரை நாயகனாம் தில்லைக்கூத்தனுக்கு வரும் ஆருத்ரா தரிசனமும் பிரசித்தி பெற்றவை.

திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்எனும் பழமொழி திருவாசகத்தின் பெருமையை பறைசாற்றுகிறது. மாணிக்க வாசகரின் பாடல்களை அவர் சொல்ல ஈசனே எழுதினார்.

சென்னை திருவான்மியூரில் உள்ள அருணகிரிநாதரின் அம்சமாகப் பிறந்த பாம்பன் சுவாமிகளின் ஆலயத்தில் மார்கழி மாதம் வளர்பிறை பிரதமை அன்று மயூர வாகன சேவை ஆண்டுதோறும் விமரிசையாக நடக்கிறது.

கிருஷ்ண பரமாத்மா, ‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்எனக் கூறி இம்மாதத்தை பெருமைபடுத்தியுள்ளார்.

நூற்றியெட்டு திவ்யதேசங்களுள் ஒன்றான கும்பகோணம் சார்ங்கபாணி ஆலயத்தில் உத்திராயண, தட்சிணாயன வாசல்கள் உள்ளன. தை முதல் ஆனி வரை தட்சிணாயன வாசல் வழியேவும் ஆடி முதல் மார்கழி வரை உத்திராயண வாசல் வழியேவும் சென்று பெருமாளை தரிசிக்க வேண்டும்.

கோவர்த்தனகிரியைத் தூக்கி கோவிந்தன் எனும் பட்டப்பெயரை கிருஷ்ண பரமாத்மா பெற்றது மார்கழி மாதத்தின் கடைசி நாளான போகியன்றுதான்.
மார்கழி மாதத்தில் பெண்கள் வண்ணக் கோலங்களின் நடுவே பசுஞ்சாணியினால் பிள்ளையார் பிடித்து வைத்து ஆரம்பிப்பர். மார்கழி மாதம் ஹனுமத் ஜெயந்தியோடு முடிவடையும். இதைத்தான் பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது என்பர்.



மார்கழி மாத விடியற்காலையில் வீசும் காற்றில் நம் உடல் நலத்திற்கு நன்மை தரும் சக்திகள் உள்ளன. சூரிய ஒளியில் அந்த சக்திகள் மறைந்து விடும் என்பதால் மார்கழி மாத விடியற்காலையில் கோலம் போடுவது, பஜனை பாடி செல்வதை பெரியவர்கள் மரபாக்கினர். அந்த அதிகாலைக் காற்றிலுள்ள சக்திகள் வாத, பித்த ரோகங்களை சரி செய்யும்.

அந்நாளில் திருமணத்திற்காகக் காத்திருக்கும் கன்னிப்பெண்கள் உள்ள வீட்டினர் மட்டுமே கோலத்தின் நடுவே பூசணிப்பூ வைப்பர். அதைக் கொண்டு அந்த வீட்டில் திருமண வயதில் பெண் இருப்பதை அறிந்து தை மாதம் பெண் பார்த்து திருமணத்தை நிச்சயிப்பர்.

மார்கழி மாதம் தேவர்களின் பிரம்ம முகூர்த்த நேரமாக கொண்டாடப்படுவதால் அந்த மாதத்தில் செய்யும் தெய்வ வழிபாடுகள் மிகுந்த நன்மை
களைத் தரும். இப்படி தெய்வ வழிபாடுகளுக்கு இடையூறாக இருக்கக் கூடாதென்பதற்காகத்தான் மார்கழியில் குடும்ப சுப விசேஷங்களை நடத்துவதில்லை.

ரமண மகரிஷி, விவேகானந்தர், தொண்டரடிப் பொடியாழ்வார் ஆகிய மகான்களின் அவதாரம் இந்த மார்கழி மாதத்தில்தான் நிகழ்ந்தது.

ராமநாமத்தையே தாரக மந்திரமாய் ஜபித்து அந்த ராமனிடமே கலந்த திருவையாறு தியாகபிரம்மத்தின் ஆராதனை நடப்பதும் இந்த மாதத்தில்தான்.

ஆலயங்களில் மார்கழி மாத விடியற்காலையில் தரப்படும் வெண்பொங்கலில் உள்ள இஞ்சி, மிளகு போன்றவை குளிரினால் வரும் நோய்களிலிருந்து நம்மைக் காக்கும்.

மானக்கஞ்சாறர், சாக்கியர், வாயிலார், சடையனார், இயற்பகையார் போன்ற நாயன்மார்கள் ஈசனுடன் இரண்டறக் கலந்ததும் இந்த மார்கழியில்தான்.

வைணவ ஆலயங்களில் பகல்பத்து, இராப்பத்து உற்சவங்கள் நடப்பதும் பெருமாள் மோகினித் திருக்கோலம் கொள்வதும் மூலமூர்த்திகள் தைலக்காப்பில் அருள்வதும் இந்த மாதத்தில்தான்.

விஜய் சுவாமிஜி,
செல் :+91 9443351497 , 9842499006.


Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :