💥💥இன்று ஓர் ஆலயம்💥💥
🔥🔥ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில்🔥🔥
சுவாமி : ஆபத்சகாயர், பழனப்பிரான், பரமேஸ்வரன், அமுதலிங்கேஷ்வரர்.
அம்பாள் : பெரிய நாயகி, சிவசுந்தர கல்யாணி அம்மை.
மூர்த்தி : விநாயகர், வேணுகோபாலர், பைரவர், தக்ஷிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மா.
தீர்த்தம் : மங்கள தீர்த்தம் (பயனிற்றி அழிந்துவிட்டது), காவிரி தீர்த்தம், அமுத தீர்த்தம், முனிகுப்பம் தீர்த்தம், தேவதீர்த்தம்.
தலவிருட்சம் : கதலி (வாழை), வில்வம்.
தலச்சிறப்பு : தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் இத்தலம் 50 வது தலம் ஆகும். ஆபத்சகாயேஸ்வரர்  திருக்கோவில் முதல் ஆதித்த மன்னராலும், முதல் பராந்தக மன்னராலும் கட்டப்பட்டது.  பழமையான ராஜகோபுரம் மூன்று  நிலைகளை கொண்டுள்ளது.  கொடிமரமில்லை, பலிபீடம் நந்தி உள்ளன.  வெளிச்சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர் சன்னதிகள்  உள்ளது.  முன்மண்டபத்தில் வலப்பகுதி வாகன மண்டபமாக அமைந்துள்ளது.  விநாயகரை வணங்கி வாயிலைக் கடந்து  உட்சென்றால் இடதுப்பக்க பிரகாரத்தில் சப்த மாதர்கள், விநாயகர், வேணுகோபாலர் சன்னதிகளும், சிவலிங்கங்கள், நடராச சபை,  பைரவர், நவக்கிரகம் உள்ளது.
கோஷ்ட மூர்த்தங்களில் மேல் தளத்தில் கிழக்கே சிவன் மற்றும் பார்வதி, தெற்கே வீணாதர தக்ஷிணாமூர்த்தி, மேற்கில்  அண்ணாமலையார், வடக்கே பிரம்மா நின்ற திருகோலத்தில் அருள்பாலிக்கின்றனர்.  அர்த்த மண்டபத்தில் தென்திசை நோக்கி  அதிகார நந்தி கை கூப்பிய நிலையில், உடைவாளுடன் காட்சியளிக்கிறார்.  சுவாமி சன்னிதி பிரகாரத்தில் முருகன் இருக்க  வேண்டிய இடத்தில் வேணுகோபாலர் குழலுடன் காட்சியளிப்பது சிறப்பு ஆகும்.  நேரே மூலவர் ஆபத்சகாயேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.  ஆபத்சகாயர் சன்னிதிக்கு சற்று முன்பாகவே சிறிய மண்டபத்தில் சுந்தர நாயகி  அருள்பாலிக்கிறார்.  அம்பாள் வெளிப்பிரகாரத்தில் ஈசனுக்கு இடப்பக்கமாக தனிக்கோவிலில் அருள்பாலிக்கிறார்.


பங்குனி, புரட்டாசி பௌர்ணமிகளிலும் அதற்கு முன்பின் இரண்டு நாட்களிலும் நிலா இத்தல இறைவன் மீது படுகிறது.  குபேரன்,  திருமால், திருமகள், தர்மசர்மா என்னும் அந்தணன் முதலியோர் பூசித்து பேறுபெற்ற தலம்.  நந்திபெருமானுக்கு ஈசன்  மணமுடிக்க எண்ணினார்.  சிலாத முனிவரின் மகனான நந்திக்கு திருமழபாடியில் திருமணம் நடைபெற்றது.  நந்தியும்  ஈசனுடைய பிள்ளை போன்றவர் என்பதால் அவரை ஏழூர் ஊர்வலமாக அழைத்துவர ஈசன் விரும்பினார்.  ஊர்வலம்  திருவையாற்றில் தொடங்கி, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, கண்டியூர், திருப்பூந்துருத்தி, தில்லைஸ்தானம்  வழியாக மீண்டும் திருவையாற்றை வந்தடையும்.
திருமண தினத்தன்று சிவபெருமான் கண்ணாடிப் பல்லக்கில் எழுந்தருளியிருக்க, நந்தி அவருடைய மனைவியுடன் இருக்க, ஏழூர்  உற்சவமாகச் செல்வதுதான் சப்தஸ்தான விழாவின் ஐதீகம் ஆகும்.  இதில் ஏழு ஊருக்கும் பல்லக்கு தோள்களிலேயே சுமந்து  செல்லப்படுகிறது.  சித்திரா பௌர்ணமி அன்று சப்தஸ்தான விழாவெகு விமர்சையாக நடைபெறுகிறது.  திருவையாற்றைச்  சுற்றி அமைந்துள்ள ஏழு தலங்களில் (சப்தஸ்தான தலங்கள்) ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் இரண்டாவதாக அமைந்துள்ளது.   இத்தலத்திற்கு திருப்பழனம், கதலிவனம், கெளசிகாஷ்ரமம், பிரயாணபுரி, பழனிப்பதி என்று பல பெயர்களில்  அழைக்கப்படுகிறது.  சந்திரன் வழிபட்ட தலம்.
தல வரலாறு : கௌதம நதி தீர்த்தத்தில் இருந்து சுசரிதன் என்ற அந்தணச் சிறுவன் பெற்றோரை இழந்து அமைதி நாடி தல  யாத்திரையாக வந்தான்.  அச்சிறுவன் திருப்பழனத்தில் ஒரு இரவு தங்கினான்.  அன்று கனவில் எமதர்மன் தோன்றி, “இன்று  முதல் ஐந்தாம் நாள் நீ மரணம் அடைவாய்எனக் கூறி மறைந்தான். இதனைக் கேட்ட சிறுவன் பயம் கொண்டு பழனப் பிரானை  சரணடைந்தான்.  சிவபெருமான் அசிரீரியாக நீ திருவையாற்றுக்குச் சென்றால் உயிர் பிழைத்துக்கொள்வாய்என்று  அச்சிறுவனுக்கு ஏற்ப்பட்ட ஆபத்திற்கு உதவி செய்ததார்.  எனவே இத்தல இறைவன் ஆபத்சகாயர் என அழைக்கப்பட்டார் என்பது  புராண வரலாறு ஆகும்.
தல புராணத்தில் இத்தலத்து இறைவனுக்கு இலக்குமி வணங்கி வரம் பல பெற்றுத் தன் இருப்பிடம் புறப்பட்டதால் இத்தலத்திற்குப்  பிரயாணபுரி என்றும், இறைவனுக்கு பிரயாணபுரீசர் என்றும் பெயராயிற்று எனக் கூறப்படுகிறது.  கெளசிக முனிவரின்  ஆஸ்ரமம்இத்தலம் பாற்கடலைக் கடைந்த போது கிடைத்த அமுதத்தில் கெளசிகர் பங்கைப் பத்திரமாக ஒரு பாத்திரத்தில் மூடி  வைத்திருந்ததாகவும், இதனை அறிந்து கொள்ளையடிக்க வந்த அசுரரை, இத்தலத்து இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட ஐயனார்,  காளி மூலம் அளிக்கப்பட்டதாக கௌசிகர் அமுதத்தை கொண்டு சிவலிங்கப் பிரதிஷ்டை செய்தார் என்பது ஒரு புராணக் கதை.
வழிபட்டோர் : குபேரன், திருமால், திருமகள், சுசரிதன் என்ற அந்தணச் சிறுவன்.
பாடியோர் : திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்.
நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை.
பூஜை விவரம் : இரண்டு கால பூஜை.
திருவிழாக்கள் : சப்தஸ்தான விழா, மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம்.
அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.
கோவில் முகவரி : அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்,
திருப்பழனம் அஞ்சல், திருவையாறு - 613 204, தஞ்சாவூர்.

விஜய் சுவாமிஜி,
செல் :+91 9443351497 , 9842499006.

#ஆபத்சகாயேஸ்வரர்திருக்கோவில்திருப்பழனம்திருவையாறுதஞ்சாவூர்



Comments

Popular posts from this blog

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்