💥💥இன்று ஓர் ஆலயம்💥💥
🔥🔥அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோயில்🔥🔥
சுவாமி : அஷ்டலட்சுமி, மகாலட்சுமி, மகாவிஷ்ணு.
அம்பாள் : ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, கஜலட்சுமி, சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி.
தீர்த்தம் : சமுத்திர புஷ்கரணி (வங்கக் கடல்).
தலச்சிறப்பு : விஷ்ணுவின் துணைவியே லட்சுமி தேவி என்பது யாவரும் அறிந்ததே. தனம், தான்யம், கஜம், சந்தானம், வீரம், விஜயம், வித்யா போன்ற பாக்கியங்களை அருளும் இந்த லட்சுமி அவதாரங்களை ஒருசேர வணங்குவது விசேஷமான ஐதீகமாக பக்தர்களால் கருதப்படுகிறது. கடற்கரையை ஒட்டியே வீற்றிருக்கும் இந்த கோயில் நான்கு அடுக்குகளைக் கொண்டுள்ளது. இவற்றில் எட்டு அவதார வடிவங்களும் வெவ்வேறு பிரிவுகளில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இரண்டாவது தொகுதியில் உள்ள மஹாலட்சுமி மற்றும் மஹாவிஷ்ணுவை வணங்கிய பின்னர் மற்ற தெய்வ வடிவங்களை வணங்க வேண்டும் என்ற ஐதீக விதி இங்கு பின்பற்றப்படுகிறது. மூன்றாவது தளத்தில் சந்தானலட்சுமி, விஜயலட்சுமி மற்றும் கஜலட்சுமி தெய்வங்கள் வீற்றுள்ளன. நான்காவது தளத்தில் தனலட்சுமி மட்டுமே வீற்றுள்ளார். முதல் தளத்தில் ஆதிலட்சுமி, தைரியலட்சுமி மற்றும் தான்ய லட்சுமி தெய்வங்கள் வீற்றுள்ளன.



1. ஆதிலட்சுமி
பாற்கடலைக் கடைந்த போது தோன்றியவள். இவ்வடிவம் தேவி என்றும் நிலைத்திருப்பவள் என்பதனைக் குறிக்கிறது. இவ்வம்மை மஞ்சள் பட்டு அணிந்து அழகிய கீரிடத்துடன் காட்சியளிக்கிறாள். இவளுக்கு நான்கு கரங்கள் உள்ளன.
2. சந்தானலட்சுமி
சந்தானம் என்றால் குழந்தைச் செல்வம் என்று பொருள். ஒரு வம்சம் தழைத்து வளர குழந்தைச் செல்வம் இன்றியமையாதது. அத்தகைய குழந்தை செல்வத்தை வழங்குபவள். இவ்வம்மை ஆறு திருக்கரங்களுடன் தலையில் பின்னலாகிய சடையுடன் குழந்தையை மடியில் இருத்தி அருள்பாலிக்கிறாள்.
3. கஜலட்சுமி
இவ்வம்மையே இராஜலட்சுமி என்றழைக்கப்படுகிறாள். இத்தேவியின் கருணையினாலே இந்திரன் கடலுக்கு அடியில் இருந்த இந்திரலோகத்தைத் திரும்பப் பெற்றான்.
4. தனலட்சுமி
தனம் என்பது பணம் அல்லது பொன்னினைக் குறிக்கும். பணம் நாம் சுக வாழ்வு வாழ மிகவும் அவசியம்; நம்மில் பலரால் விரும்பப்படுவது. இத்தேவி வைபவ லட்சுமி என்றும் அழைக்கப்படுகிறாள்.
5. தான்யலட்சுமி
இவ்வம்மையே எங்கும் செழுமை நிறைந்திருக்கக் காரணம் ஆவாள். இவளின் அருளாலே உலகில் பசிப்பிணி நீங்குகிறது. இவள் தானியங்கள், உணவுகள், ஊட்டச்சத்துகள், வேளாண்மை ஆகியவற்றிற்கு அதிபதி. இவ்வம்மையே அன்ன லட்சுமி என்றும் போற்றப்படுகிறாள்.
6. விஜயலட்சுமி
இவ்வம்மை ஜெயலட்சுமி என்றும் அழைக்கப்படுகிறாள். நம் வாழ்வில் வெற்றிகளுக்கெல்லாம் காரணமாக இருப்பவள். இவ்வம்மையின் அருட்பார்வையாலே நம்மால் தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்க முடியும். வெற்றி, தைரியம், நம்பிக்கை, பயமின்மை ஆகியவற்றிற்கு இவளே அதிபதி.
7. வீரலட்சுமி
இவ்வன்னை தைரிய லட்சுமி என்றும் அழைக்கப்படுகிறாள். வாழ்வின் இன்பம், துன்பம் ஆகியவற்றை சமமாக பாவிக்கும் நிலையை அருளும் சக்தி இவளுக்கு உண்டு.
8. வித்யாலட்சுமி
இவ்வன்னையே வித்யா எனப்படும் ஞானமாகிய கல்விக்கு அதிபதி. இத்தேவி கலைமகள் மற்றும் அலைமகள் சேர்ந்த வடிவம் ஆவாள். கல்வி, அறிவு, திறமை ஆகியவற்றை அருளுவாள்.
தல வரலாறு : காஞ்சிப் பெரியவர் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் கனவிலே தோன்றி தமக்கு இந்த இடத்தில் கோவில் ஏற்படுத்துமாறு மஹாலக்ஷ்மி பணிக்க அதை சிரமேற் கொண்டு இக்கோவில் ஸ்தாபிக்கப்பட்டது. முக்கூர் ஸ்ரீநிவாஸ வரதாச்சாரியார் ஸ்வாமிகளின் பெரு முயற்சியால் இக்கோவில் 1976-ல் கட்டப்பட்டது. கோவை லக்ஷ்மி மில்ஸ் நிறுவனம் இத்திருக்கோவில் கட்ட பெருமளவில் திருப்பணி கைங்கர்யம் செய்திருக்கின்றனர்.
நடைதிறப்பு : காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
திருவிழாக்கள் :
புரட்டாசி நவராத்திரி திருவிழா 10 நாட்கள் இத்தலத்தில் பத்து விதமான அலங்காரங்களில் திருவிழா நடைபெறும்,
தீபாவளி,
லட்சுமி பூஜை,
தை வெள்ளி,
ஆடி வெள்ளி ஆகிய நாட்களில் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அந்த தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருவர்.
அருகிலுள்ள நகரம் : சென்னை.
கோயில் முகவரி : அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோயில்,
பெசன்ட் நகர், சென்னை - 600 090.
தொலைபேசி எண் : 044 - 2446 6777, 2491 7777, 2491 1763.
விஜய் சுவாமிஜி,
செல் :+91 9443351497 , 9842499006.

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :